Sunday, January 31, 2010

கப்ர் வழிபாடு


நல்லடியார்களின் கப்ர்களிலும், அவர்களின் பெயர்களைப் பயன்படுத்தியும் மார்க்கத்திற்கு முரணான, அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் பல செயல்கள் நடக்கின்றன. அவற்றில் ஓரிறைக் கொள்கைக்கு முரணான சிலசெயல்களும் அவை தவறு என்பதற்கான ஆதாரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1) சிலர், இறந்துவிட்ட நபிமார்களிடமும் நல்லடியார்களிடமும் -அவ்லியாக்களிடமும்- தங்களின் தேவைகளை கேட்டுப் பிரார்த்திக்கின்றனர், பரிந்துரைக்க வேண்டுகின்றனர். துன்பங்களை நீக்கக் கோருகின்றனர், அவர்களிடம் உதவி, அடைக்கலம் மற்றும் பாதுகாப்புத் தேடுகின்றனர்.
பிரார்த்தனைகளுக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே!. அவனுக்கே உரிய இவ்வணக்கத்தை பிறருக்குச் செய்வது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:

وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ

(நபியே!) உமதிரட்சகன் அவனைத் தவிர (மற்ற எவரையும்) வணங்கக் கூடாது என்று கட்டளையிட்டுள்ளான். (அல்குர்ஆன் 17:23)

أَمَّنْ يُجِيبُ الْمُضطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَئِلَهٌ مَعَ اللَّهِ

துன்பத்திற்குள்ளானவனின் அழைப்பிற்கு பதிலளித்து, அவனுடைய தீங்கை நீக்குகின்ற, மேலும் உங்களை பூமியின் பிரதிநிதிகளாக்குகின்ற அல்லாஹ்வுடன் வேறு வணக்கத்திற்குரியவன் இருக்கின்றானா? (நிச்சயமாக இல்லை) (அல்குர்ஆன் 27:62)

2) சிலர், சில பெரியார்கள் மற்றும் அவ்லியாக்களின் பெயர்களை நிற்கும் போதும், உட்காரும் போதும், கஷ்டத்தின் போதும் கூறும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் ஒருவர்: யா முஹம்மத்! என்கிறார். மற்றொருவர்: யா அலீ! என்கிறார். மற்றொருவர்: யா ஹுஸைன்! என்கிறார். அவர்: யா பதவீ! என்கிறார். இவர்: யா ஜீலானி! யா முஹைதீன்! என்கிறார். அவர்: யா ஷாதலீ! என்கிறார். இவர்: யா ரிஃபாயீ! என்கிறார். அவர் ஐதுரூஸை அழைக்கிறார். இவர் ஸெய்யிதா ஜைனபை அழைக்கிறார். மற்றொருவர் இப்னு அல்வானை அழைக்கிறார்.

அல்லாஹ் கூறுகிறான்:
إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ

அல்லாஹ்வைத் தவிர நீங்கள் அழைப்பவர்கள் நிச்சயமாக உங்களைப் போன்ற அடியார்களே! (அல்குர்ஆன் 7:194)

3) கப்ரை வழிபடும் சிலர் அதனை வலம் வருகிறார்கள். அதன் மூலைகளை கையால் பூசி அதனை உடலில் தடவிக் கொள்கிறார்கள். அதன் மணலை முத்தமிடுகிறார்கள். முகத்தில் பூசிக் கொள்கிறார்கள். கப்ர்களைக் கண்டால் உடனே ஸஜ்தாவில் விழுந்து விடுகிறார்கள். மேலும் கப்ர்களுக்கு முன்னால் மிகவும் பயபக்தியுடனும் பணிவுடனும் சிரம் தாழ்ந்தவர்களாக, அச்ச உணர்வுடன் நின்று கொண்டு, நோயை நீக்க, குழந்தை கிடைக்க, தேவைகள் நிறைவேற மற்றும் இதுபோன்ற தன் கோரிக்கைகளை முன்வைக்கின்றார்கள். என்னுடைய தலைவரே! நெடுந்தூரம் பயணம் செய்து உங்களிடம் வந்துள்ளேன். எனவே என்னை நஷ்டமடைந்தவனாக வெறுங்கையுடன் திருப்பி அனுப்பிவிடாதீர்! என்றுகூட சிலர் வேண்டுகிறார்கள். ஆனால்

அல்லாஹ் கூறுகிறான்:
وَمَنْ أَضَلُّ مِمَّنْ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَنْ لَا يَسْتَجِيبُ لَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَهُمْ عَنْ دُعَائِهِمْ غَافِلُونَ

மேலும் அல்லாஹ்வை விடுத்து மறுமை நாள் வரை (அழைத்த போதிலும்) தனக்கு பதில் கொடுக்காதவர்களை அழைப்பவனை விட மிகவழிகெட்டவன் யார்? அவர்களோ, இவர்களின் அழைப்பைப் பற்றி மறந்தவர்களாக உள்ளனர். (அல்குர்ஆன் 46:5)

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:
مَنْ مَاتَ وَهْوَ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ نِدًّا دَخَلَ النَّارَ

அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக பிரார்த்தித்தவனாக மரணித்தவன் நரகம் புகுந்துவிட்டான். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் -ரலி, நூல்: புகாரீ 4497)

4) சிலர் கப்ர்களுக்கு சென்று மொட்டையடித்துக் கொள்கின்றனர். சிலர் கப்ர்களின் கண் கொள்ளாக்காட்சி, அவ்லியாக்களின் அபரிமித ஆற்றல் என்றெல்லாம் பல தலைப்புக்களில் கட்டுக் கதைகளை இட்டுக்கட்டி எழுதியுள்ளனர். அந்த புத்தகத்திற்கு மனாஸிக் ஹஜ்ஜில் மஷாஹித் -கண்கூடான ஹஜ் வழிபாடு- என்றும் பெயர் சூட்டியுள்ளனர். சிலர் அவ்லியாக்கள்தான் இவ்வுலகில் ஆட்சி செய்கிறார்கள் என்றும் துன்பம் தரவும் இன்பம் தரவும் அவர்கள் ஆற்றல் மிக்கவர்கள் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:
وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ

அல்லாஹ் உமக்கு ஒரு இடரை அடையச் செய்தால் அதனை நீக்குபவன் அவனைத் தவிர(வேறு) எவரும் இல்லை. மேலும் அவன் உமக்கு யாதொரு நன்மையை நாடினால் அவனது பேரருளை தடுப்பவர் எவருமில்லை. தன் அடியார்களில் அவன் நாடியவர்களுக்கு அதனை அடையச் செய்கின்றான். அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். (அல்குர்ஆன் 10:107)

No comments: